

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், கோயில் நிலங்கள், கட்டிடங்கள், சொத்து விவரங்களைப் பொதுமக்கள் கணினி வழியில் பார்வையிடும் வகையில் புவிசார்குறியீடு செய்து இணையத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசின் இன்றைய செய்திக்குறிப்பு:
“இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள் மற்றும் இணையப் பதிவேற்றம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
துறை அலுவலர்களுடன் நடத்திய ஆய்வில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அமைச்சர் உத்தரவிட்டார்.
1. திருக்கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிடுதல்.
2. திருக்கோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் பதிவேற்றம் (Uploading) செய்தல்.
3. திருக்கோயில் நிலங்கள் மற்றும் கட்டிடங்களின் விவரங்களை, பொதுமக்கள் கணினி வழியில் பார்வையிடும் வகையில் புவிசார்குறியீடு செய்து இணையத்தில் வெளியிடுதல். (Publishing)
4. திருக்கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் பதிவேற்றம் (Uploading) செய்தல்.
5. திருக்கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் திருக்கோயில் வருவாயினங்களைப் பெருக்கும் வகையில் விரைந்து செயல்படுதல்.
ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) ரமண சரஸ்வதி, கூடுதல் ஆணையர் (விசாரணை) திருமகள், இணை ஆணையர்கள், மற்றும் தலைமையிட அலுவலர்கள் கலந்து கொண்டனர்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.