Published : 19 May 2021 10:40 AM
Last Updated : 19 May 2021 10:40 AM

சென்னையில் தடுப்பூசி முகாம்கள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 208 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அரசு அறிவித்துள்ள ஊரடங்கினை அமல்படுத்துவது தொடர்பாகவும், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக், தலைமையில் மண்டல கள ஒருங்கிணைப்பு குழு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மண்டல வாரியாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கை குறித்தும், தொற்று பாதித்த நபர்களுக்கு முதற்கட்ட உடற் பரிசோதனை செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து தனிமை படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்தும் ஆய்வு நடத்தினார்.

மேலும் மாநகராட்சியின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வாகனங்களின் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிக அளவில் கரோனா தடுப்பூசி செலுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், காய்ச்சல் போன்ற கரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ தொகுப்பு குறித்தும், அரசு அறிவித்துள்ள ஊரடங்கினை அமல்படுத்துவது குறித்தும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, விரிவாக ஆய்வு நடத்தினார்.

மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளில் பயிற்சி மருத்துவர்கள் மூலமாக தனிமை படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும். மண்டல நலஅலுவலர்கள் பயிற்சி மருத்துவர்களின் தொலைபேசி அழைப்பு பதிவேட்டினை ஆய்வு செய்து தொற்று பாதித்த நபர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்படின் அவர்களை மருத்துவமணைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு நபரின் உயிரும் மிகவும் இன்றியமையாதது. எனவே, தொற்று பாதித்து வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான அனைத்து விதமான மருத்து மற்றும் அடிப்படை தேவைகள் கிடைப்பதை மருத்துவ குழுவினர் கண்காணிக்க வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ஏப்ரல் 01 முதல் மே 18 வரை 15,137 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 8,41,806 நபர்கள் பயனடைந்துள்ளார்கள். இவர்களில் 24,745 நபர்களுக்கு RTPCR பரிசோதைனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடர்ந்து மண்டல கள அலுவலர்களால் கண்காணிக்கப்பட வேண்டும். மே.17 அன்று ஒருநாள் மட்டும் 19,205 நபர்களுக்கு RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை நாளொன்றுக்கு 25,000 என்கின்ற அளவிற்கு அதிகரிக்க ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

மண்டலங்களிலும், வட்டார அளவிலும் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய மைங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் இருப்பதையும், குறிப்பாக தேவையான திறன் கொண்ட மின்சார ஜெனரேட்டர்கள் இருப்பதையும், அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அறிவித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஊரடங்கை அமல்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் காவல் துறையினருடன் இணைந்து 30 ஊரடங்கு அமலாக்கக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏப்.09 முதல் மே.17வரை அரசின் வழிமுறைகளை பின்பற்றாத 382 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத தனிநபர்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.1,62,87,281/- அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் வசூலிப்பது அரசின் நோக்கமல்ல. கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மே.17 அன்று ஒருநாள் மட்டும் 208 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு 19,580 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கையை மேலும், அதிகரிக்க மண்டல கள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், இணை ஆணையாளர் (கல்வி) சங்கர்லால் குமாவத், துணை ஆணையர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ், (சுகாதாரம்) மேகநாத ரெட்டி, (பணிகள்), இந்திய குடிமைப்பணி நிலையிலான மண்டல கள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x