Published : 18 May 2021 09:08 PM
Last Updated : 18 May 2021 09:08 PM

திரவ நிலை ஆக்சிஜன் கொள்கலன் அமைக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமாகா நூதன போராட்டம்

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் திரவ நிலை ஆக்சிஜன் கொள்கலன் அமைக்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் த.மா.கா. சார்பில் நூதன போராட்டம் நடந்தது.

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமையில் நகர செயலாளர் மூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பால்ராஜ், மாநில மாணவரணி பொதுச்செயலாளர் மாரிமுத்து ராமலிங்கம், மாணவரணியை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் துளசி மாலை அணிந்து, கைகளில் வேப்பிலை மற்றும் காலியான ஆக்சிஜன் உருளை ஆகியவற்றுடன் வந்து முற்றுகையிட்டனர். அவர்கள், கோவில்பட்டி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோருக்கு காலதாமதமின்றி ஆக்சிஜன் சப்ளை செய்ய வேண்டும். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ நிலை ஆக்சிஸன் நிறுவ வேண்டும் என கோஷங்கள் முழங்கினர்.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகானந்தத்திடம் வழங்கிய மனுவில், தூத்துக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்ட போது, மாவட்டத்தின் அடுத்த பெரிய நகரான கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 413 படுக்கைகள் உள்ளன. இதில் 250 படுக்கைகள் குழாய் வழியாக ஆக்சிஜன் செலுத்தும் வசதி கொண்டது. தற்போது கோவில்பட்டி பகுதியில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக தினமும் ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கும், போதிய ஆக்சிஜன் அளவு இல்லாதவர்களுக்கும் ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆனால், கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லை. ஆக்ஸிஜன் உற்பத்தியில் உள்ள தொய்வு காரணமாக மருத்துவமனையில் உள்ள உருளைகள் தொடர்ந்து காலியாகவே இருக்கின்றன. இந்த உருளைகளில் ஆக்சிஜன் நிரப்புவதற்கு ஓரிரு நாட்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இதனால், ஆக்சிஜன் அவசரத் தேவை உள்ள நோயாளிகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படும் நிலை தொடர்ந்து வருகிறது.

ஆக்சிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ வாயு கொள்கலன் நிறுவ வேண்டும்.

இதனால் ஆக்சிஜன் இல்லை என்ற பற்றாக்குறையை போக்க முடியும். மேலும், இதன் மூலம் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கலாம். நோயாளிகளை உயர் சிகிச்சை என்ற பெயரில் வெளியூர்களுக்கு உள்ள மருத்துவமனைக்கு அனுப்புவதை தடுக்கப்படும். இதனால், கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தன்னிறைவு பெற்ற மருத்துவமனையாக மாறும்.

எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் இந்தப் பிரச்சினையில் தனி கவனம் செலுத்தி, போதுமான ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்து தரவேண்டும். திரவ ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x