Published : 18 May 2021 07:22 PM
Last Updated : 18 May 2021 07:22 PM

புதிய குடும்ப அட்டை வழங்க எழைத் தொழிலாளியிடம் ரூ.500 லஞ்சம்; வட்ட வழங்கல் அலுவலர் பணியிடை நீக்கம்: அமைச்சர் அர.சக்கரபாணி அதிரடி

திண்டுக்கல்

குஜிலியம்பாறை தாலுகாவில் பொதுமக்களுக்கு புதிய குடும்ப அட்டை(ரேஷன் கார்டு) வழங்க தலா ரூ.500 லஞ்சம் வாங்கிய வட்ட வழங்கல் அலுவலர் மீது உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி உத்தரவிட்டதின்பேரில் அவரரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா பகுதி வறண்ட பகுதி. இப்பகுதியில் கூலித்தொழிலாளர்களே அதிகம் வசித்துவருகின்றனர். இவர்களில் குடும்ப அட்டை இல்லாத பலர் புதிதாக விண்ணப்பித்திருந்தனர்.

தகுதியின் அடிப்படையில் விசாரித்து இவர்களுக்கான புதிய குடும்ப அட்டை வழங்க தயார்நிலையில் இருந்தது. இதை வாங்குவதற்கு வந்த பொதுமக்களிடம் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.500 வழங்கவேண்டும் என கூறி பணத்தை குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் பெற்றுவந்துள்ளார்.

மேலும் புதிய குடும்ப அட்டை வந்தவர்களுக்கு போனில் அழைத்து வாங்கிக்கொள்ளசொல்லியுள்ளனர். நேற்றுமுன்தினம் தொழிலாளி ஒருவர் குடும்ப அட்டை வாங்கவந்தேபோது அவரிடம் ரூ.500 கேட்டுள்ளார் சரவணன்.

இதற்கு தன்னிடம் ரூ.200 தான் உள்ளது. கூலிக்கு போனால் தான் வருமானம். இதற்குமேல் இல்லை என்று கூறவே. அப்படியென்றால் நாளை பணத்துடன் வந்து புதிய குடும்ப அட்டையை வாங்கிச்செல்லும்படி கூறியுள்ளார்.

இந்த தகவல் அப்பகுதியில் சமூக செயல்பாட்டில் ஈபடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலுபாரதிக்கு தெரியவந்தது. அப்பாவி கூலித்தொழிலாளியின் நிலையை பார்த்த அவர், உடனடியாக குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் சென்று அங்கிருந்த வட்ட வழங்கல் அலுவலர் சரணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

இதுகுறித்து பாலுபாரதி இந்து தமிழ் செய்தியாளரிடம் கூறியதாவது: குஜிலியம்பாறை தாலுகா பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி. கூலித்தொழிலாளர்கள் அதிகம் இருக்கின்றனர். புதிதாக விண்ணப்பித்தவர்கள் 300 பேருக்கு குடும்ப அட்டைகள் வந்துள்ளது. இதுவரை 30 பேருக்கு புதிய குடும்ப அட்டை ரூ.500 வீதம் பெற்றுக்கொண்டு வட்டவழங்கல் அலுவலர் சரவணன் வழங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்று அலுவலகம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். ரூ.500 என்பது கூலித்தொழிலாளிகளின் மூன்று நாள் வருமானம். அவர்களிடம் எப்படி பணம் வாங்க இந்த அலுவலருக்கு மனம் வந்ததோ, என்றார்.

இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியதாவது:

குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் புதிய குடும்ப அட்டை வழங்க பொதுமக்களிடம் ரூ.500 கையூட்டு வாங்குவதாக புகார் வந்தது. இதன்அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், உணவுத்துறை அமைச்சரான நானும், இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டோம்.

இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் சரவணனை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் பொற்காலா ஆட்சி நடத்திவருகிறார். பொதுமக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ளவேண்டும்.

இதுபோன்ற எத்தகைய முறைகேட்டையும் இம்மி அளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு பொறுத்துக்கொள்ளாது. கடும் நடவடிக்கை எடுக்க சற்றும் தயங்காது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x