Published : 18 May 2021 06:05 PM
Last Updated : 18 May 2021 06:05 PM

சென்னையில் வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால் ரூ.2,000 அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

ககன்தீப் சிங் பேடி: கோப்புப்படம்

சென்னை

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியே வருவது கண்டறியப்பட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (மே 18) வெளியிட்ட அறிவிப்பு:

"கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. இவற்றின் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டலத்திற்கு இரண்டு எண்ணிக்கையில் மண்டல அமலாக்கக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது நாள்தோறும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறுபவர்களிடமிருந்து அபராதத் தொகையினையும், விதிகளை மீறி நடத்தப்படும் கடைகளை மூடி சீல் வைத்து, அதன் உரிமையாளர்களிடமிருந்து அபராதத் தொகையினையும் வசூலித்து வருகின்றன.

மேலும், கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவர்களின் ஆலோசனையின்படி தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியால் 2,000-க்கும் மேற்பட்ட முன்களத் தன்னார்வலர்கள் (Focus Volunteers) பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருப்பதற்காக, இத்தகைய ஏற்பாடுகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலன் கருதி அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களில் ஒரு சிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளை விட்டு வெளியே வருவதாக புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.

இத்தகைய செயலினால் கரோனா வைரஸ் தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் மருத்துவரால் அறிவுறுத்தப்பட்ட நாட்கள் வரை வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதனை மீறி வீடுகளை விட்டு வெளியில் வருபவர்களிடமிருந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அமலாக்கப் பிரிவின் மூலம் முதல் தடவையாக ரூ.2,000 அபராதமாக வசூலிக்கவும், இரண்டாவது தடவை மீண்டும் வீடுகளை விட்டு வெளியில் வருவது கண்டறியப்பட்டால் அவர்களை பெருநகர சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கரோனா பாதுகாப்பு மையங்களில் (COVID CARE CENTRE) தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீடுகளை விட்டு வெளியே வரும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் குறித்த விவரங்களை அருகில் வசிப்பவர்கள் மற்றும் ஏனையோர் 044-2538 4520 என்ற தொலைபேசி எண்ணில் புகாராக அளிக்கலாம்.

எனவே, கரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்குத் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டுள்ளார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x