Published : 18 May 2021 12:09 PM
Last Updated : 18 May 2021 12:09 PM

கரோனா பெருந்தொற்று காலத்திலும் குறுகிய அரசியல் செய்யும் பாஜக: வைகோ கண்டனம்

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியாத ஆத்திரத்தில், பிரதமர் மோடியும், அமித்ஷாவும், தேர்தல் ஆணையம், சிபிஐ, ஆளுநர் பொறுப்பு என அரசு அமைப்புகள் அனைத்தையும், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் கடமையில் தவறி செயல்படுவதைக் கண்டிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

“பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், இந்திய அரசு அமைப்புச் சட்டத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. ஒரே நாடு ஒரே மொழி என்ற முழக்கத்துடன், இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்க முயற்சிக்கின்றது, மாநில அரசுகளை, குற்றேவல் புரியும் அடிமைகள் ஆக்க முனைகின்றது.

புதிய கல்விக் கொள்கை குறித்து, மாநில கல்வி அமைச்சர்களுடன் பேசாமல், நேரடியாக கல்வித்துறைச் செயலர்களை ஒருங்கிணைத்து நடுவண் அரசு நடத்திய கூட்டத்தில், தமிழக அரசு பங்கு ஏற்காது என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து இருப்பது, பாஜக அரசுக்குச் சாட்டை அடி ஆகும்.

அதிமுக என்ற குதிரையின் மீது ஏறி, எப்படியாவது தமிழ்நாட்டில், புறவாசல் வழியாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்பதற்காக, பல்லாயிரம் கோடி பணத்தைக்கொட்டி, பல அணிகளை உருவாக்கிக் குழப்பம் விளைவித்தனர். அவர்களது முயற்சிகள் அனைத்தையும், தமிழக வாக்காளர்கள் தகர்த்துத் தவிடு பொடி ஆக்கி விட்டனர்.

மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடிக்க, மதவெறியைத் தூண்டினர். நரேந்திர மோடி, அமித் ஷா, இருவரும், மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாகவே, தேர்தல் ஆணையம் எட்டு கட்டமாக அங்கே தேர்தலை நடத்தியது. அவர்கள் ஆட்டுவித்தபடி எல்லாம் ஆடியது.

தேர்தல் ஆணையத்தின் உதவியோடுதான், பாரதிய ஜனதா கட்சி 70 க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்றது. இல்லை என்றால், 30 இடங்கள் கூடக் கிடைத்து இருக்காது’ என்று, முதல்வர் மம்தா, சட்டப்பேரவையில் தமது முதல் உரையில் குறிப்பிட்டு இருப்பது உண்மைதான். இந்தியத் தேர்தல் ஆணையம், நடுநிலையோடு இயங்கவில்லை.

அடுத்து, அந்த மாநிலத்தின் ஆளுநர் ஜெகதீப் தங்கர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே, தன்னை சூப்பர் முதல் அமைச்சராகக் கருதிச் செயல்பட்டு வருகின்றார். மக்கள் தீர்ப்பை மதிக்காமல்,

புதிய அரசு பொறுப்பு ஏற்ற விழாவில், ‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று, வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்தார். மாநிலத்தின் கலவரம் பாதித்த பகுதிகளுக்கு அவராகவே பயணம் செய்கின்றார்.

இந்தியா விடுதலை பெற்ற நாள் முதல் கடைப்பிடித்து வருகின்ற மரபுகளுக்கு எதிராகச் செயல்படக் கூடாது என அறிவுறுத்தி, அவருக்கு முதல்வர் மம்தா எழுதிய கடிதத்தைப் புறக்கணித்ததுடன், நெறிமுறைகளை மீறிச் செயல்பட்டு, அண்டை மாநிலமான அசாமுக்கும் சென்று வந்தார்.

2016 ஆம் ஆண்டு நடந்ததாகச் சொல்லப்படுகின்ற ஊழலில், 2 அமைச்சர்களை, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, இப்போது அனுமதி வழங்கி இருக்கின்றார். அதனால், அவர்களை, சிபிஐ கைது செய்து இருக்கின்றது.

அதை எதிர்த்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா அவர்கள், சிபிஐ அலுவலகம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கின்றார். அமைச்சரை கைது செய்ய வேண்டும் என்றால், மாநில சட்டப்பேரவைத் தலைவரின் அனுமதியைப் பெற்றாக வேண்டும் என்ற மரபை மீறி இருக்கின்றார்கள் என, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிசேக் சிங்வி உள்ளிட்ட வழக்கறிஞர்களும், முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.

தமிழ்நாட்டிலும் இதேபோலத்தான், ஆளுநர் பன்வாரி செயல்பட்டு வருகின்றார். பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பொறுப்பு குறித்து, அதிமுக அரசுடன் அவர் கலந்து பேசியதே இல்லை. அந்த அவமானத்தை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமல், நாள்களைக் கடத்தி வந்தனர்.

புதுச்சேரியில், கிரண் பேடி, தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு வந்தார். ஐந்து ஆண்டுகளாக, காங்கிரஸ் அரசை இயங்கவிடாமல் தடுத்து வந்தார். வடகிழக்கு மாநிலங்களில், எதிர்க்கட்சி அரசுகளைக் கவிழ்க்கின்ற வேலைகளைத்தான் ஆளுநர்கள் செய்து வருகின்றார்கள்.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியாத ஆத்திரத்தில், நரேந்திர மோடியும், அமித் ஷாவும், தேர்தல் ஆணையம், சிபிஐ, ஆளுநர் பொறுப்பு என அரசு அமைப்புகள் அனைத்தையும், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் கடமையில் தவறிய பாரதிய ஜனதா கட்சி அரசு, எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கும், இந்திய மக்கள் ஆட்சிக் கோட்பாடுகளைச் சிதைப்பதற்கும் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்கு, மதிமுக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், மேற்கு வங்க ஆளுநரை, உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x