Last Updated : 17 May, 2021 08:50 PM

 

Published : 17 May 2021 08:50 PM
Last Updated : 17 May 2021 08:50 PM

முழு ஊரடங்கு விதிமீறல்: ஒரே நாளில் 165 வாகனங்களை பறிமுதல் செய்த கோவை காவல்துறையினர் 

கோவை 

முழு ஊரடங்கு விதிகளை மீறி, சாலைகளில் அத்தியாவசியக் காரணங்களின்றி சுற்றியவர்களின் 165 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கோவையில் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க, கடந்த 10-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முழு ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது, காவல்துறையினர் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கண்காணிப்பு தீவிரம்

அதன்படி, கோவை மாநகரில் காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் தலைமையிலும், கோவை புறநகரப் பகுதிகளில் (மாவட்டக் காவல்துறை எல்லை) மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையிலும் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல், காவல்துறையினர் மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அபராதம் விதித்தும், வாகனங்களை பறிமுதல செய்தும் வருகின்றனர்.

வழக்கம் போல், இன்றும் (மே 17-ம் தேதி) கோவையி்ல கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாகனம் பறிமுதல்

கோவை மாநகரப் பகுதியில் இன்று அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் சாலைகளில் சுற்றியதாகவும், முழு ஊரடங்கு விதிகளை மீறியதாகவும் 1,114 வாகன ஓட்டுநர்களை பிடித்த காவல்துறையினர், அவர்கள் மீது அரசின் உத்தரவை மீறியதாக வழக்குப்பதிந்துள்ளனர்.

அது தவிர, மேற்கண்ட வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழும் 2,340 வழக்குகளையும் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். தவிர, மாநகரில் 15 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல்,புறநகரப் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் 2 ஆயிரம் வழக்குகளை, மாவட்டக் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 150 வாகனங்களை காவல்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர். மாநகரக் காவல்துறை, மாவட்டக் காவல்துறை ஆகிய இரண்டும் சேர்த்து, கோவையில் இன்று மட்டும் ஊரடங்கு விதிகளை மீறியதாக 165 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x