

கீழமை நீதிமன்றங்கள் மறு உத்தரவு வரும் வரை செயல்படாது எனப் பதிவாளர் அறிவித்திருந்த நிலையில், கீழமை நீதிமன்றங்களின் அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் ஜூன் 30 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு திருநெல்வேலி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பலியானதைத் தொடர்ந்து, கீழமை நீதிமன்றப் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்திவைத்துப் பிறப்பித்துள்ள உத்தரவைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
கீழமை நீதிமன்றப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 30 வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் நீதிமன்றக் காவலை ஜூன் 30 வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பு அகற்றம், சட்டவிரோதக் கட்டுமானங்கள் இடிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.