நெல்லை அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் நிறுத்தம்: அந்தந்த தனியார் மருத்துவமனைகளிலேயே வழங்க ஏற்பாடு

நெல்லை அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் நிறுத்தம்: அந்தந்த தனியார் மருத்துவமனைகளிலேயே வழங்க ஏற்பாடு
Updated on
1 min read

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் இன்று முதல் நிறுத்தப்பட்டது.

அந்தந்த தனியார் மருத்துவமனைகளிலேயே இந்த மருந்துகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் மருத்துவமனைக்கு நேற்று வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இம்மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி முதல் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் நடைபெற்று வந்தது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கலில் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து மருந்தை பெற்றுச்சென்றனர்.

இந்நிலையில் ஒரே இடத்தில் ஏராளமானோர் திரண்டு மருந்து வாங்குவதால் கரோனா பரவல் அச்சம் மற்றும் பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைகளிலேயே மருந்தை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் நேற்றுமுதல் நிறுத்தப்பட்டது.

ஆனால் இந்த மருந்துக்காக ஏராளமானோர் நேற்று காலை 6 மணிமுதல் மருத்துவமனையில் காத்திருந்தனர். மருந்து விநியோகிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்ப நேரிட்டது.

இதனிடையே திருநெல்வேலி மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி ரெம்டெசிவிர் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் யாரும் மருந்துகள் பெறுவதற்காக திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வர வேண்டாம்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளிலேயே ரெம்டெசிவிர் மருந்துகள் கிடைக்க அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.

ரெம்டெசிவிர் மருந்துகள் தேவைப்படுவோர் சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களை அணுகலாம்.

கடந்த 9-ம் தேதி முதல் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்பட்டுவந்த ரெம்டெசிவிர் மருந்துகள் 17-ம் தேதி முதல் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in