Published : 17 May 2021 05:56 PM
Last Updated : 17 May 2021 05:56 PM

இணைய வழியில் உதகை மலர்க் கண்காட்சியை நடத்தத் திட்டம்?

உதகை தாவரவியல் பூங்காவில் காட்சி மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்ட பல வண்ண மலர்த் தொட்டிகள்.

உதகை

உதகை தாவரவியல் பூங்கா மலர்க் கண்காட்சியை நடப்பு ஆண்டில் இணையவழி மூலம் நடத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை பரிசீலித்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் உட்பட்ட இடங்கள், முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், கோடை சீசன் தொடங்கி, பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம்.

இதில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி, அரசு ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி மற்றும் தனியார் அமைப்பின் சார்பில் பழைமை வாய்ந்த கார்களின் அணிவகுப்பு, சுற்றுலாத் துறையின் சார்பில் உதகை படகு இல்லத்தில் படகுப் போட்டி மற்றும் படகு அலங்காரப் போட்டி எனப் பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

கோடை விழாவைக் காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்வர். கோடை விழாவில் அனைவரும் மிகவும் ரசித்து மகிழ்வது உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர்க் காட்சியேயாகும். தோட்டக்கலைத் துறையின் சார்பில் 5 நாட்கள் நடைபெறும் இந்த மலர்க் காட்சியில் பார்வைக்கு வைக்கப்படும் மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிக்கக்கூடியதாக இருக்கும்.

கடந்த ஆண்டில் கரோனா பரவல் காரணமாக, பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. அதன் பின்னர், படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, நேரு பூங்கா, சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 20-ம் தேதி வரை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்து சென்றனர்.

நடப்பு ஆண்டில் உதகையில் மலர்க் காட்சி சிறப்பாக நடைபெறும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு புதிய ரக மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு சுமார் 30,000க்கும் மேற்பட்ட பூந்தொட்டிகள் தயார் செய்யப்பட்டன.

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பூங்கா

இந்நிலையில், தற்போது கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால், சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு பொது முடக்கமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மலர்க் காட்சிக்கென தயார் செய்யப்பட்ட மலர்களைச் சுற்றுலாப் பயணிகள் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தோட்டக்கலைத் துறையின் சார்பில், மலர்கள் தயார் செய்யப்பட்டும் கண்காட்சி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சோகமடைந்துள்ளனர்.

இந்நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு மக்கள் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்ந்துள்ள லட்சக்கணக்கான மலர்களை இணையதளம் வழியாகக் காண மலர்க் காட்சி நடத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறை ஆலோசித்து வருகிறது.

இதற்காக, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்த் தொட்டிகளைக் காட்சி மாடங்களில் அடக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மலர்த் தொட்டிகளை வைத்துச் சிறப்பு அலங்காரங்கள் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் கூறும்போது, "மலர்க் காட்சிக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 5 லட்சம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு, சிறப்பாகத் தயார்படுத்தப்பட்டன. பூங்காவில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

பூங்காவில் உள்ள காட்சி அரங்குகளில் 1,000-க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிகளில் லில்லியம்ஸ், சால்வேனியா, ரோஸ் மேரி, மேரி கோல்ட், ஸ்டார் கோல்ட், ஸ்டார் சால்வேனியா, பிளாக்ஸ், லிமோனியா, டெல்பீனியம் உட்பட பல மலர் ரகங்களை மலர்க் காட்சி நடைபெறும் அரங்குகளில் அடுக்கும் பணி நடந்து வருகிறது.

கரோனா பரவல் காரணமாக பூங்கா மூடப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் இவற்றைக் காண வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் உதகை மலர்க் காட்சியை இணையதளம் வாயிலாக Virtual Flowershow நடத்த மாவட்ட நிர்வாகமும், தோட்டக்கலைத்துறையும் ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

உதகை தாவரவியல் பூங்காவில் நூற்றாண்டைக் கடந்து மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நூற்றாண்டுகளைக் கடந்த மலர்க் கண்காட்சி வரலாற்றில் முதன்முறையாக 2000-ம் ஆண்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தால் மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 124-வது கண்காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டும் மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்படுகிறது.

இந்நிலையில், Virtual Flowershow-க்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தால், இணையதளம் வாயிலாக மலர்க் கண்காட்சியைக் காணும் வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x