Published : 17 May 2021 04:13 PM
Last Updated : 17 May 2021 04:13 PM

சுகாதாரத்துறை அமைச்சர் வந்து சென்ற ஒரே வாரத்தில் மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ இடமாற்றம்: கரோனா சிகிச்சையில் சொதப்பியதால் நடவடிக்கையா?

மதுரை

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரைக்கு வந்து சென்ற ஒரே வாரத்திலே மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ சங்குமணி சிவகங்கைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ‘டீன்’னாக டாக்டர் சங்குமணி இருந்து வந்தார்.

இவர் அதற்கு முன் இதே மருத்துவமனையில் பொதுமருத்துவத் துறையில் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ‘டீன்’ பேனல் அடிப்படையில் சங்குமணி, மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’னாக நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற காலத்தில் கரோனா தொற்று வந்ததால் சங்குமணிக்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, அவர்களுக்கான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் சவாலாக இருந்தது.

முதல் அலையில் தற்போது போல் பெரியளவிற்கு கரோனா தொற்று பரவலும், உயிரிழப்பும் ஏற்படாததால் ஓரளவு அந்த அலையில் ஏற்பட்ட சிக்கல்களையும், சாவால்களையும் சமாளித்துவிட்டார்.

ஆனால், தற்போது இரண்டாவது அலையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாகவும், ஆனால் அது குறைத்துகாட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

போதிய ஆக்சிஜன் படுக்கை வசதிகளை, முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தாததால் பெரும்பாலான நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமலே மூச்சுத்திணறி உயிரிழக்கின்றனர்.

மேலும், அவ்வப்போது கரோனா வார்டுகளில் ஆக்ஸிஜன் விநியோகம் சீராக இல்லாமல் தடைபட்டு நோயாளிகள் உயிரிழப்பதாகவும், கடந்த ஆண்டு போல் மருத்துவ சிகிச்சையும், கண்காணிப்பும் தரமாக இல்லை என்றும் நோயாளிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக கடந்த வாரம் மதுரைக்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், செய்தியாளர்களிடமே மதுரை அரசு மருத்தவமனையில் உயிரிழப்புகள் மறைகப்பட்டால் அது சம்பந்தமாக விசாரிக்கப்படும் என்று கூறிச் சென்றார். அவர் வந்து சென்ற ஒரே வாரத்தில் மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ சங்குமணி மாற்றப்பட்டுள்ளார்.

இவருக்குப் பதிலாக சிவகங்கை அரசு மருத்துவமனை டீனாக பணிபுரியும் ரத்தினவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும், சங்குமணி ‘டீன்’ ஆன சமயத்திலேயே சிவகங்கை ‘டீன்’னாக நியமிக்கப்பட்டவர்.

மதுரை அரசு மருத்துவமனையில் இருதய மருத்துவசிகிச்சைத்துறை தலைவராக இருந்தவர். இவர், மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’னாக வருவதற்கு கடந்த ஒரு ஆண்டாகவே பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார்.

ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் ‘டீன்’ சங்குமணி செல்வாக்காகவே இருந்துவிட்டதால் ரத்தினவேலால் மதுரைக்கு வர முடியவில்லை. தற்போது திமுக ஆட்சி மாற்றம் நடந்தநிலையில் கரோனா சிகிச்சையில் மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு சொதப்பல்கள் நடந்ததாலே ‘டீன்’ சங்குமணி மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதகுறித்து மருத்துவர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘‘இவர் மட்டும் மாற்றப்படவில்லை. இவரைப் போல் தமிழகம் முழுவதும் பலர் மாற்றப்பட்டுள்ளனர்.

ஆனால், இவர் மதுரையிலே இருக்க விருப்பப்பட்டார். ஆனால், என்ன காரணத்திற்காக மாற்றப்பட்டார் என்பது தெரியவில்லை, ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x