Last Updated : 17 May, 2021 03:46 PM

 

Published : 17 May 2021 03:46 PM
Last Updated : 17 May 2021 03:46 PM

கரோனா பாதித்தோரின் குழந்தைகளைப் பாதுகாக்க மையம்: தமிழகத்தில் முதன்முறையாக நெல்லையில் தொடக்கம்

திருநெல்வேலி 

கரோனா பாதித்த பெற்றோரின் தொற்றால் பாதிக்கப்படாத குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் செயல்பட தொடங்கியுள்ளது.

இம்மையத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆய்வு செய்தார். ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு உள்ளதால் வெகுவிரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆய்வின்போது திருநெல்வேலி மாவட்டத்தின் ஆக்சிஜன் தேவை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் இயங்கி வரும் தனியார் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்களின் தொற்று பாதிக்கப்படாத குழந்தைகளை இங்கு வைத்து பராமரிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் முதல்முறையாக இந்த குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் குழந்தைகளை எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று குறையும் என்று நம்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்காக அனைத்து துறைகளையும் முடுக்கி விட்டுள்ளோம்.

ஆக்சிஜன் தேவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். கரோனாவால் பாதிக்கப்படும் பெற்றோர்களின் தொற்று பாதிக்கப்படாத குழந்தகளை இந்த மையத்தில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆலை இயங்க தொடங்கியுள்ளது. ஆக்சிஜனை திரவமாக்குவதற்கு உரிய வெப்ப நிலையை அடைய வேண்டும். எனவே வெப்ப நிலையை உயர்த்த வேண்டிய பணிகள் நடைபெற்று வருகிறது.

மிக விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும். மேலும் ரூர்கேலாவில் இருந்து 5 டிரக்குகளில் தூத்துக்குடிக்கு திரவ ஆக்சிசன் வருகிறது. அங்கிருந்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப ஆக்சிசன் அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் குழந்தைகளை சேர்க்க சைல்டு லைன் 1098, தொலைபேசி எண் 0462 2551953, வாட்ஸஅப் எண் 9944746791-ல் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x