

தமிழகம் முழுவதும் கடந்த 10ம் தேதி தொடங்கி வரும் 24ம் தேதி கரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் தினமும் காலை 7 மணி முதல் 10 வரையில் மட்டுமே அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதிவுள்ளது.
திருமண மண்டபம், கோயில் போன்ற இடங்களில் கூட்டமாக திருமணம் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை எளிமையாக நடத்திக் கொள்ள அனுமதி உள்ளது.
இதனால் மாநிலம் முழுவதுமே கோயில் வாசலில் எளிமையாக திருமணங்கள் நடைபெறுகின்றன.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊரடங்கு தடை உத்தரவால் திருமணங்கள் விழாக்கள் நடைபெற தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் இன்று கோயில் வாசலில் மணமகன் மணமகள் மற்றும் 20 பேர் கொண்ட குழுவினர் குழுவினராக வந்து திருமணத்தை முடித்துச் சென்றனர்.
கரோனா 2வது அலை ஊரடங்கு எதிரொலியால் திருமணத்தை விமரிசையாக நடத்த முடியாமல் மிகவும் எளிமையாக நடத்துவதாக திருமண வீட்டார் கூறினர்.
இதேபோல் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வாசலிலும் திருமணங்கள் நடைபெற்றன.