Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM

சிறப்பு ரயில்களில் பயணிக்க இன்று முதல் இ-பதிவு முறை கட்டாயம்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை

பொதுமக்கள் சிறப்பு ரயில்களில் பயணிக்க, இன்றுமுதல் இ-பதிவு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. கரோனா அச்சம் காரணமாக வெளியூர் பயணத்தை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால், தெற்கு ரயில்வேயில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பயணிகள் வருகை ஓரளவுக்கு இருக்கும் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசின் புதிய உத்தரவுப்படி, ரயில்களில் பயணிக்க இன்று முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயணிகளின் வருகையைப் பொறுத்து குறைந்த அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் சிறப்பு ரயில்களில் பயணிகளுக்கு இ-பதிவு முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தமிழக அரசின் புதிய உத்தரவுப்படி, அத்தியாவசிய தேவையான திருமணம், முக்கிய உறவினர்களின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோருக்கான உதவி போன்றவற்றுக்கு மாவட்டத்துக்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ள இன்று (17-ம் தேதி) முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும் என அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் ரயில்களில் பயணிக்க இன்று முதல் இ.பதிவு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x