Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

ராஜீவ் காந்தி நினைவு நாளில் 30 லட்சம் முகக்கவசங்களை காங்கிரஸார் வழங்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை

காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-வது நினைவு நாளில், கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்த வேண்டும். கூட்டம் கூடி அஞ்சலிசெலுத்துவதை தவிர்க்க வேண்டும். ராஜீவ் நினைவு நாள் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினேன்.

இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் வரும் 21-ம் தேதி ராஜீவ் காந்தியின் 30-வது நினைவு நாளையொட்டி 30 லட்சம் முகக்கவசங்களை மக்களுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ராஜீவ் நினைவு நாளில் உணவு, மருத்துவ உபகரணங்கள், மருந்துகளை காங்கிரஸ் கட்சியினர் மக்களுக்கு வழங்க வேண்டும். காங்கிரஸ்எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களது தொகுதியில் மே 21-ம் தேதி குறைந்தது 1 லட்சம் முகக் கவசங்களையும், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் குறைந்தது 50 ஆயிரம் முகக்கவசங்களையும் விநியோகிக்க வேண்டும்.

மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளின் உறவினர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடல்களைத் தகனம் செய்பவர்கள் மற்றும் தேவையான மக்களுக்கு உணவு வழங்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களுக்கு உதவ வேண்டும். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2 ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். இதுவே, ராஜீவ் காந்திக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x