Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

கரோனா பரவலால் பணிகள் முடக்கம்: ராக்கெட் ஏவும் திட்டங்கள் தற்காலிகமாக தள்ளிவைப்பு

நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டுதல் மற்றும் வானியல் ஆய்வு செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இதுதவிர, வர்த்தக ரீதியாகவும் வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களை தொடர்ந்து விண்ணில் செலுத்தி வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுதல் திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா 2-வது அலைபரவல் தீவிரத்தால் ராக்கெட் ஏவுதல் திட்டங்கள் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:

கரோனா பரவல் காரணமாக, குறைந்த அளவிலான பணியாளர்களைக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதனால், ஏற்கெனவே திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, இந்த மாதம் விண்ணில் ஏவப்பட இருந்த ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இதர ஆய்வுப் பணிகளும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து விரைவில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த ஆண்டு பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் மட்டுமே இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x