Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

கொடைக்கானல் ரோஸ் கார்டனில் பூத்துக் குலுங்கும் ரோஜா பூக்கள்: தொடர் மழையால் விரைவில் உதிரும் நிலை

கொடைக்கானல் ரோஸ் கார்டனில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் ரோஜா பூக்கள்.

கொடைக்கானல்

கொடைக்கானல் ரோஸ் கார்டனில் பல வண்ணங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் அதை பார்த்து ரசிக்க சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலாத் தலங்களுக்குப் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் உள்ளரோஜா தோட்டம் தோட்டக்கலைத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. இங்கு பல்வேறு வகையானரோஜாக்கள் பராமரிக்கப்படுகின்றன. மொத்தம் 16,000 ரோஜா செடிகள் ரோஸ் கார்டனில் உள்ளன. இந்தச் செடிகளைப் பராமரிப்பதற்கு என பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொடைக்கானலில் கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ரோஸ் கார்டனில் பூத்துக் குலுங்கும் பல்வேறு வகையான ரோஜாப் பூக்களை கண்டு ரசிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு வழக்கம் போல் பல வண்ணங்களில் ரோஜாப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் இதை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் ரோஸ்கார்டன் வெறிச்சோடிக் காணப்படுகிறது. கொடைக்கானலில் தற்போது கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால் பூத்துக் குலுங்கும் ரோஜாப் பூக்கள் விரைவில் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x