Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

வாகன ஓட்டியிடம் அபராதத் தொகையை திருப்பி அளித்த காவல் ஆய்வாளர்: முதல்வர் உத்தரவின்பேரில் நடவடிக்கை

கோப்புப் படம்

திருவள்ளூர்

திருவள்ளூர் பகுதியில் மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு மருந்து வாங்க சென்ற தந்தையிடம் வசூலித்த அபராதத் தொகையை, முதல்வர் உத்தரவால், காவல் ஆய்வாளர் திருப்பிஅளித்துள்ளார்.

திருவள்ளூர் அருகே உள்ள செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(49). இவரின் 9 வயது மகன் மனவளர்ச்சிக் குன்றியவர். இந்நிலையில், நேற்று முன் தினம் பாலகிருஷ்ணன், தன் மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு மருந்து வாங்குவதற்காக தன் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர், காக்களூர்பை-பாஸ் சாலையில் சென்றபோது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட திருவள்ளூர் தாலுக்கா போலீஸாரிடம், மகனுக்கு மருந்து வாங்க செல்வதாகக் கூறியுள்ளார். ஆனால், பாலகிருஷ்ணன் கூறுவதை நம்பமறுத்த போலீஸார், ஊரடங்கு உத்தரவை மீறியதாக கூறி, அவர் மருந்து வாங்க வைத்திருந்த 500 ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர். இதனால், மருந்து வாங்க முடியாமல் வீடு திரும்பிய பாலகிருஷ்ணன், இச்சம்பவம் குறித்து, தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, அதை முதல்வர் அலுவலக பக்கத்தில் டேக் செய்துள்ளார்.

இந்த தகவல், முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு சென்றதையடுத்து, முதல்வரின் உத்தரவின்படி, தலைமை செயலக அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் பாலகிருஷ்ணனை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அதன்பிறகு, திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த், பாலகிருஷ்ணன் வீடுதேடிச் சென்று அவரிடம் வசூலித்த அபராதத் தொகையான500 ரூபாயையும், குழந்தைக்கான மருந்துகளையும் அளித்து, மன்னிப்பு கேட்டுள்ளார்.

அபராதம் வசூலிக்கப்பட்ட 4 மணி நேரத்தில், அத்தொகை முதல்வர் உத்தரவால் திருப்பி அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், பாலகிருஷ்ணனிடம் அபராதம் வசூலித்த உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாலகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட இந்தப் பிரச்சினையை உணர்ந்து, உரிய தீர்வு கண்ட தமிழக முதல்வருக்கு பாலகிருஷ்ணன் மட்டுமல்லாமல், சமூக ஆர்வலர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x