Published : 19 Dec 2015 03:36 PM
Last Updated : 19 Dec 2015 03:36 PM
கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இன்று ஆஜராகவில்லை. ஆஜராக ஒரு மாதம் அவகாசம் கேட்டு இருவர் சார்பிலும் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
அனிருத் இசையில், சிம்பு பாடிய பீப் பாடல், ‘யூ டியூப்' மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலின் வரிகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சிம்பு, அனிருத் ஆகியோர் மீது சென்னை, கோவை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, விருதுநகர் உட்பட தமிழகம் முழு வதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கோவையில் மாதர் சங்கத்தினர் கொடுத்த புகாரின்பேரில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது ரேஸ் கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரும் 18-ம் தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இருவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், இருவரும் இன்று ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், சிம்பு, அனிருத் சார்பில் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இன்று கடிதம் வழங்கப்பட்டது.
சிம்பு, அனிருத் ஆகிய இருவரும் ஆஜராக ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT