Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

மாநகராட்சி மயான ஊழியர்களின் பணி நேரத்தை முறைப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு உறுதி

‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, மாநகராட்சி மயான ஊழியர்களின் பணி நேரத்தை முறைப்படுத்த மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த 15-ம் தேதி, ‘மயானங்களுக்கு வரும் சடலங்கள் அதிகரிப்பால் வேலைப் பளு, மன அழுத்தத்தால் அவதிக்குள்ளாகும் பணியாளர்கள்’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. இதனிடையே, சென்னை எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில், அப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 104 படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநகராட்சி பராமரிக்கும் மயானங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வேலைப் பளு அதிகரித்திருப்பதால், அவர்கள் அவதிக்குள்ளாவதாக செய்தித்தாளில் செய்தி வந்தவுடன், தொடர்புடைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். அவரும் மயானங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அவர்களின் பணி நேரத்தை எப்படி முறைப்படுத்துவது என்று ஓரிரு நாட்களில் மாநகராட்சி ஆணையர் தெரிவிப்பார்.

தற்போது டான் பாஸ்கோ பள்ளியில் திறக்கப்பட்டுள்ள 104 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தில் 3 மருத்துவ ஆலோசகர்கள், 7 மருத்துவர்கள், 24 செவிலியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

இம்மையத்தில் நடைபெறும் சிகிச்சை செலவு, மருத்துவர்கள் செலவையும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்றுக்கொள்கிறது. இங்கு உருவாகும் மருத்துவக் கழிவுகளை தினமும் அகற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு இணையான கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதி இங்கு வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இம்மையத்தை ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது கரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். மாநகராட்சி சார்பில் மட்டுமல்லாது திமுக சார்பிலும் குறுஞ்செய்தி பிரச்சாரம் வாயிலாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இடங்கள் மற்றும் தடுப்பூசியால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களுக்கு தெரிவித்து வருகிறோம். அரசு எடுக்கும் நடவடிக்கை மூலம், இன்னும் ஒரு வாரத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை எங்கும் மறுக்கப்படவில்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் ஜெ.மேகநாத ரெட்டி, பி.ஆகாஷ், எம்.பி. தயாநிதி மாறன், எம்எல்ஏ இ.பரந்தாமன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x