Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம்: ஆய்வு செய்ய குழு அமைக்க கோரிக்கை

கோப்புப் படம்

செங்கல்பட்டு

கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் மாவட்டநிர்வாகம் சார்பில் குழு அமைக்ககோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் என்ற அளவில் பாதிப்பு அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் செங்கல்பட்டு, குரோம்பேட்டை, தாம்பரம் பகுதி அரசுமருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சுமார் 2,800 படுக்கை வசதிகளுடன் மாவட்டத்தில் 8-க்கும்மேற்பட்ட இடங்களில் கரோனாதனிமைப்படுத்தும் மையங்கள்அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதாலும், சிகிச்சை மையங்களில் இடவசதி இல்லாததாலும், கரோனா பாதித்தவர்கள் பரிதவித்து வருகின்றனர். இதனால், சில தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் மாவட்டத்தில் 43 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மூலம் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் இடவசதி இல்லாததால், தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அதிக அளவில் செல்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, அரசுக்கு புகார்கள் வந்துள்ளன.

எனவே மாவட்ட நிர்வாகம் தனியாக ஒரு குழு அமைத்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்கவும், அதிகம் வசூலிக்கும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் கூறியதாவது: கரோனா பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் அரசு விதித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x