Published : 17 May 2021 03:15 AM
Last Updated : 17 May 2021 03:15 AM

ராணிப்பேட்டையில் தந்தை உயிரிழந்த அதிர்ச்சியில் மகளும் உயிரிழப்பு

ராணிப்பேட்டையில் மாரடைப்பால் தந்தை உயிரிழந்த தகவலை அறிந்த மகள் அதிர்ச்சியில் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் காரை நேரு நகரைச் சேர்ந்தவர் சம்பத் (63). இவர், ராணிப்பேட்டை அருகேயுள்ள தோல் தொழிற் சாலையில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் ரேணுகா தேவி(35) திருமணமாகி தனது தந்தையின் வீட்டில் இருந்தபடி தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சம்பத் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டு சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சம்பத்துக்கு நேற்று முன்தினம் இரவு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே, அவர் ராணிப் பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சம்பத் நேற்று காலை உயிரிழந்தார். இந்த தகவல் வீட்டில் இருந்த ரேணுகாதேவிக்கு உறவினர்கள் தெரிவித்தனர்.

இதைக் கேட்டதும், கதறி அழுத ரேணுகாதேவி மயக்கமடைந்தார். உடனே, அவரை உறவினர்கள் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தந்தை உயிரிழந்த செய்தியை கேட்டதும் மகளும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2 பேரின் உடல்களையும் உற னர்கள் இறுதிச்சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x