Last Updated : 16 May, 2021 06:32 PM

 

Published : 16 May 2021 06:32 PM
Last Updated : 16 May 2021 06:32 PM

ஊரடங்கு மீறல்களை தடுக்க ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு; 128 வாகனங்கள் பறிமுதல்: சிவகங்கை எஸ்பி தகவல்

சிவகங்கை அரண்மனைவாசலில் ஊரடங்கு விதிமீறல்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பதை பார்வையிட்ட எஸ்பி ராஜராஜன்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி ஆகிய நகர் பகுதிகளில் ஊரடங்கு விதிமீறல்களை தடுக்க ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருவதாகவும், 2 நாட்களில் விதிமீறிய 128 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எஸ்.பி. ராஜராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும், பலர் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிகின்றனர். இதனால், தொற்று பரவல் குறையவில்லை. இதையடுத்து, ஊரடங்கு விதியை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் 2,300 போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிவகங்கை, காரைக்குடி போன்ற நகர் பகுதிகளில், ட்ரோன் கேமரா மூலம் விதிமீறல்கள் கண்காணிக்கப்படுகின்றன. இன்று (மே 16) சிவகங்கை அரண்மனைவாசலில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதை மாவட்ட எஸ்.பி. ராஜராஜன் பார்வையிட்டார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ-க்கள் தலைமையிலான போலீஸார், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நகர் பகுதிகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டு தினங்களில் மாவட்டத்தில் 128 வாகனங்கள் பறிமுதல் செய்து, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் முகக்கவசம் அணியாத 60 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, ரூ.60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x