Published : 16 May 2021 02:40 PM
Last Updated : 16 May 2021 02:40 PM

அதி தீவிரப் புயலால் 3 மாவட்டங்களில் கனமழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அதி தீவிரப் புயலாக மாறியுள்ள டவ் -தே புயலால், தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்துச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''நேற்று மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த டவ் -தே புயல் மேலும் வலுப்பெற்று நேற்று மாலை தீவிர புயலாக மாறியது. அதனைத் தொடர்ந்து இன்று (மே.16) காலை அதி தீவிரப் புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

கர்நாடகக் கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 145 - 155 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 170 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்களுக்கு மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்''.

இவ்வாறு நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x