Last Updated : 16 May, 2021 02:39 PM

 

Published : 16 May 2021 02:39 PM
Last Updated : 16 May 2021 02:39 PM

மேட்டூர் அணை திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

மேட்டூர் அணை திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (மே 16) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், நிகழாண்டு பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது, தூர்வாருவது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதன் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், "மேட்டூர் அணை திறப்பு குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் எனக் கூறினர். இக்கருத்துகளை எல்லாம் முதல்வரிடம் தெரிவிப்போம். அவர் முறையாக அறிவிப்பார்.

தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக நிதி குழுவுக்குப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x