

சென்னை: ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம், விருதுநகர் மாவட்டம்
ராமசாமி ராஜா நகரில் உள்ள தனது தொழிற்சாலையில் பொது மக்களின் நலனுக்காக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது.
இந்த ஆலை ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி, அருப்புகோட்டை மற்றும் சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஆக்சிஜனை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் முன்னிலையில் இந்த ஆலையை நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கண்ணன் தொடங்கிவைத்தார்.ரூ.50 லட்சம் செலவில் நிறுவப்பட்ட இந்த ஆலை, நாளொன்றுக்கு 45 லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட 48 சிலிண்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இது வாயு வடிவத்தில் 7000 லிட்டருக்கு சமம். நிமிடத்துக்கு 10 லிட்டர் என்ற விகிதத்தில், ஒரு சிலிண்டர் ஒரு நோயாளிக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். இந்த ஆலையில் இருந்து தொடர்ந்து மருத்துவ ஆக்சிஜனை வழங்குவதன் மூலம், ஒவ்வொரு நாளும் சுமார் 24 உயிர்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு ராம்கோ சிமென்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.