வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கையால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை: அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தகவல்

வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கையால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை: அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தகவல்
Updated on
1 min read

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும்கால்நடை பராமரிப்பு துறைஅமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தென் கிழக்கு அரபிக் கடலில் மாலத்தீவையொட்டிய பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேலும் வலுப்பெற்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து 16-ம் தேதி (இன்று)தீவிர புயலாக மாறும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் உத்தரவின்படி புயல் எச்சரிக்கை குறித்த தகவல் உடனடியாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள், மீனவர்கூட்டுறவு சங்கங்கள், ஆழ்கடல் மீன்பிடி ஒருங்கிணைப்பு சங்கங்கள், தேவாலயங்களுக்கும் இதுதொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கைக்கு முன்னரே ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றுவிட்ட படகுகளை, செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் விஎச்எப் தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் தொடர்புகொண்டு அருகிலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள், மீன்பிடித்தளங்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு கரைதிரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், வள்ளவிளை மற்றும் தேங்காய்பட்டினம் ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீன்வளத்துறை ஆணையரக மைய கட்டுப்பாட்டு அறையிலிருந் தும் (தொடர்பு எண்: 044-29530392) உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் கடந்த 13-ம் தேதி ஆழ்கடல்மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி, படகுகளை உடனடியாக கரைதிரும்ப வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

ஆழ்கடலில் உள்ள படகுகளின் இருப்பிடம் குறித்த தகவல்கள் இந்திய கடலோர பாதுகாப்பு படை மற்றும் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் படகுகள் கரை திரும்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், தமிழக முதல்வரின் உத்தரவின்படி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, கோவா, மஹாராஸ்டிரா, குஜராத் மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் மீன்துறை இயக்குநர்களிடம், அம்மாநில மீன்பிடி துறைமுகங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளை நிறுத்துவதற்கு அனுமதி மற்றும் அத்தியாவசிய தேவைகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in