Last Updated : 15 May, 2021 07:31 PM

 

Published : 15 May 2021 07:31 PM
Last Updated : 15 May 2021 07:31 PM

முழு ஊரடங்கு நாளில் வழங்கப்பட்ட டோக்கனுக்கு வேறு நாளில் கரோனா நிவாரணம்: தமிழக அரசுக்கு ரேசன் கடை பணியாளர்கள் வலியுறுத்தல்

முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் ரேசன் கடைகளில் கரோனா நிவாரணத்துக்காக வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு இன்னொரு நாளில் பணம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என ரேசன் கடை பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் கரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இருப்பினும் நாளையும், மே 23 ஞாயிற்று கிழமையும் கரோனா நிவாரண நிதி வழங்க குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக் கிழமைக்கு பதிலாக வேறு நாளில் கரோனா நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரேசன் கடை பணியாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசுக்கு மதுரை மாவட்ட ரேசன் கடை பணியாளர்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டும் வகையில் உள்ளது.

கரோனா தொற்றை தடுக்க ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் ஞாயிற்று கிழமைகளில் ரேசன் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா நிவாரணம் பெற ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கும் 200 பேர் வரை வருவர். முழு ஊரடங்கின் போது 200 பேர் வரை ஒரு இடத்தில் கூடுவது கரோனா விதிமுறைகளை மீறுவதாகும். இதனால் கரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

எனவே, முழு ஊரடங்கான ஞாயிற்று கிழமைகளில் (மே 16, 23 ) வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு வேறு ஒரு நாள் கரோனா நிவாரணம் வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஞாயிற்று கிழமைகளை அனைவரும் முழு ஊரடங்கை கடைபிடித்து பாதுகாப்புடன் இருக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x