Published : 15 May 2021 06:00 PM
Last Updated : 15 May 2021 06:00 PM

சென்னையில் ஊரடங்கு: மீறுவோரைக் கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீஸ் கண்காணிப்பு

தமிழகம் முழுவதும் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10ஆம் தேதி முதல் இலகுவாக இருந்த ஊரடங்கு இன்று முதல் கடுமையாக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஊரடங்கை மீறி வெளியில் வருபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வேறு வழியில்லாமல் ஊரடங்கை அமல்படுத்துவதாகவும், ஊரடங்கின்போது போலீஸார் பொதுமக்களிடம் கடுமை காட்ட வேண்டாம் என்றும், வாகனங்களைப் பறிமுதல் செய்யக்கூடாது என்றும் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

இதனால் ஊரடங்கு அமலில் இருந்தும் இயல்பான காலம்போல் பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றி ஊரடங்கு எச்சரிக்கையின்றி வழக்கம்போல் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்தது.

இதையடுத்து மீண்டும் அனைத்துக் கட்சிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. கட்டுப்பாடுகளும் தீவிரமாக்கப்பட்டன. தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு மே 17-ம் தேதி முதல் இ-பதிவு முறை கொண்டுவரப்படுகிறது.

காலை 10 மணிவரை மட்டுமே கடைகள் திறக்கவும், 10 மணிக்கு மேல் தேவையின்றி சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. மாநகராட்சி சார்பில் சென்னையில் 30 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. சென்னை போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு காவல் துறையினரின் மூலம் வாகனத் தணிக்கை, ரோந்து வாகனத் தணிக்கை மூலம் விதிமுறைகளை மீறி, சுற்றுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.

சில இடங்களில் தனிநபர்கள் தன்னிச்சையாகச் சுற்றுவது, குடியிருப்புப் பகுதிகளில் தேவையில்லாமல் குழுவாக அமர்வது, அரட்டை அடிப்பது, இருசக்கர வாகனங்களில் சுற்றி வருவது ஆகியவற்றைக் கண்காணிப்பதற்காக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோ பதிவுகளை வைத்துப் பொறுப்பு அதிகாரிகளின் தகவல் பரிமாற்றம் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை காமராஜர் சாலையில் காந்தி சிலை சந்திப்பு அருகில் தென்சென்னை கூடுதல் ஆணையர் கண்ணன், கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்புப் பணியைப் பார்வையிட்டனர். இதேபோல் சென்னை முழுவதும் ட்ரோன் கேமராக்கள் மூலம் குடியிருப்புகள், மக்கள் அடர்த்தியாக உள்ள தெருக்களைக் கண்காணிக்க போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.

இதுதவிர சென்னையில், ஒரே நாளில், 1,727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2,709 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டன. அரசு அனுமதித்த நேரத்தைக் கடந்து விற்பனையில் ஈடுபட்ட 120 கடைகளுக்கு போலீஸார் உதவியுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த 8ஆம் தேதியில் இருந்து இன்று வரை சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து, ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x