கோவை தெற்கு தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி வழக்கு

கோவை தெற்கு தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி வழக்கு
Updated on
1 min read

கோவை தெற்கு தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரிஉயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதியில், இந்துஸ்தான் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், அக்கட்சியின் தென்மண்டலத் தலைவருமான கே.ராகுல்காந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று,வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் எனக்கு 73 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

தேர்தலுக்கு முன்பாக வானதி சீனிவாசனுக்கு எதிராக தொகுதி முழுவதும் எதிர்ப்பலை நிலவிய சூழலில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதனால் கோவை தெற்கு தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு கடந்த 3-ம் தேதியே தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கோவை தெற்கு தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in