Published : 19 Dec 2015 08:50 AM
Last Updated : 19 Dec 2015 08:50 AM

ராமஜெயம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸார் ரகசிய அறிக்கை தாக்கல்

முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸார் ரகசிய அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் 29.3.2012-ல் திருச்சியில் கொலை செய்யப் பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். ராமஜெயம் கொலை செய்யப்பட்டு மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகளைப் போலீஸார் கண்டுபிடிக்கவில்லை.

இதனால், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் பலமுறை அவகாசம் வழங்கியது. ஒவ்வொரு முறையும் ‘குற்றவாளிகளை நெருங்கி விட்டோம், குற்றவாளிகள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன’ என சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த வழக்கு அக்டோபர் 28-ல் விசாரணைக்கு வந்தபோது, ராமஜெயம் கொலை தொடர்பாக பல தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. 3 மாதம் அவகாசம் அளித்தால் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் என சிபிசிஐடி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸாருக்கு டிச.18 வரை 2 மாதம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ரவி வாதிட்டனர்.

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான ரகசிய அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து சிபிசிஐடி எஸ்பி அமித்குமார்சிங் தாக்கல் செய்தார். அந்த கவர் பதிவாளர் முன்னிலையில் திறக்கப்பட்டு அறிக்கை நகல் நீதிபதியிடம் வழங்கப்பட்டது. பின்னர் விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x