Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

காவல்துறையின் கரோனா குறித்த விழிப்புணர்வு ஆடியோவுக்கு துபாயிலிருந்து குரல் கொடுத்த வானொலி செய்தி வாசிப்பாளர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா குறித்த காவல்துறையின் விழிப்புணர்வு ஆடியோவுக்கு துபாய் ரேடியோ ‘கில்லி’யில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரியும் அனுராதா என்பவர் குரல் கொடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் கரோனா விழிப்புணர்வுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக விழிப் புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒலித்தொகுப்பு முக்கிய மார்க் கெட் பகுதி, வாகன தணிக்கை செய்யும் இடங்களில் ஒலிபரப்பப் படுகிறது.

அந்த குரலுக்குச் சொந்தக்காரர் மதுரையைச் சேர்ந்த அனுராதா என்பவர். தற்போது துபாயில் உள்ள துபாய் ரேடியோ கில்லி 106.4 என்ற தமிழ்ப் பண்பலையில் ரேடியோ ஜாக்கியாகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிகிறார். எம்.ஏ. பட்டதாரியான இவர் திரைப்படங்களுக்குப் பின்னணி குரல் கலைஞராகவும் பணி புரிந்துள்ளார்.

இவர் ஏற்கெனவே மதுரை மாநகர் காவல்துறை மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை ஆகியவற்றுக்காக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒலித்தொகுப்பைத் தயாரித்து இலவசமாக அளித்துள்ளார்.

அதேபோல் தற்போது ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு கரோனா தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை தயாரித்து தனது குரலில் பதிவு செய்து அனுப்பி உள்ளார்.

இலவசமாக வழங்கி வரும் அனுராதாவின் சேவையை ராமநாதபுரம் மாவட்டக் கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x