ஆம்பூரில் உயிரிழந்த 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி: இறுதிச் சடங்கில் கலந் துகொண்டவர்களுக்கு பரிசோதனை

ஆம்பூரில் உயிரிழந்த 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி: இறுதிச் சடங்கில் கலந் துகொண்டவர்களுக்கு பரிசோதனை
Updated on
1 min read

ஆம்பூரில் உயிரிழந்த 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 255 பேருக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆம்பூர் நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் தூய்மை பணி, கிருமி நாசினி தெளித்தல், முகக் கவசம் விநியோகம், துண்டு பிரசுர விநியோகம் உள்ளிட்ட பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும், ஆம்பூரில் பல்வேறு பகுதிகளில் 50 பேர் நோய் தொற்றால் பாதிகப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆம்பூர் ஜவஹர்லால் நேரு நகரை சேர்ந்த 49 வயதுடைய ஆண் ஒருவர், இந்திரா நகரை சேர்ந்த 76 வயதுள்ள ஆண் ஒருவர், ஆம்பூர் ஈடிகர் தெருவை சேர்ந்த 52 வயதுள்ள ஆண் என 3 பேர் கரோனா நோய் தொற்று காரணமாக நேற்று உயிரிந்தனர். இவர்களின் உடல்கள் கரோனா பரவல் தடுப்பு விதிகளின்படி அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோரது உடல்களை அரசு மருத்துவமனை நிர்வாகம் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அப்பகுதியினர் இறந்தவர்களின் குடும்ப வழக்கப்படி சடலங்களை அடக்கம் செய்துள்ளனர். ஆனால், இறந்தவர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது இன்று மாலை உறுதியானதால், ஆம்பூர் நகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதைதொடர்ந்து, ஆம்பூர் ஏ-கஸ்பா மற்றும் சான்றோர்குப்பம் பகுதிக்கு இன்று சென்ற நகராட்சி அதிகாரிகள், கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட குடும்பத்தினர், உறவினர்கள், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் என மொத்தம் 255 பேருக்கு இன்று கரோனா பரிசோதனை செய்தனர்.

இதையடுத்து, பரிசோதனை செய்யப்பட்ட 255 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பரிசோதனை முடிவு ஓரிரு நாளில் வெளியாகும் போது கரோனா பாதிப்பு ஆம்பூரில் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in