Last Updated : 14 May, 2021 05:15 PM

 

Published : 14 May 2021 05:15 PM
Last Updated : 14 May 2021 05:15 PM

தூத்துக்குடி வஉசி துறைமுகம் 2020- 2021-ம் நிதியாண்டில் ரூ.113.72 கோடி வருவாய் ஈட்டி சாதனை

தூத்துக்குடி வஉசி துறைமுக கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் இருந்து ராட்சத கிரேன்கள் மூலம் நிலக்கரி இறக்கப்படுகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வஉசி துறைமுகம் கரோனா நெருக்கடி காலத்திலும் 2020- 2021-ம் நிதியாண்டில் ரூ.113.72 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில் 2020- 2021-ம் நிதியாண்டுக்கான செயல்பாடுகள் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த நிதியாண்டில் (2020- 2021) 31.79 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.

இது 2019-2020 நிதியாண்டில் கையாளப்பட்ட 36.08 மில்லியன் டன் சரக்குகளை விட 11.89 சதவிகிதம் குறைவாகும். இதில் இறக்குமதி 22.53 மில்லியன் டன்களும் (70.86 சதவீதம்), ஏற்றுமதி 9.18 மில்லியன் டன்களும் (28.90 சதவீதம்), சரக்கு பரிமாற்றம் 0.08 மில்லியன் டன்களும் (0.24 சதவீதம்) கையாளப்பட்டுள்ளது.

2020-2021 நிதியாண்டில் மொத்தம் 7.62 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. இது முந்தைய நிதியாண்டு கையாண்ட அளவான 8.04 சரக்கு பெட்டகங்களுடன் ஒப்பிடுகையில் 5.22 சதவீதம் குறைவாகும்.

வஉசி துறைமுகத்தில் 2020-2021-ம் நிதியாண்டு இயக்க வருவாய் ரூ.549.51 கோடி ஆகும். முந்தைய 2019-2020 நிதியாண்டு இயக்க வருவாய் ரூ.582.90 கோடியாக இருந்தது. 2020-2021 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூ.322.63 கோடி ஆகும். முந்தைய 2019-2020 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூ.328.71 கோடியாக இருந்தது.

2020-2021 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூ.113.72 கோடி ஆகும். முந்தைய 2019-2020 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூ.135.23 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டைவிட நிகர வருவாய் ரூ.21.51 கோடி குறைந்துள்ளது.

புதிய திட்டங்கள்:

வஉசி துறைமுகத்தில் ரூ.64.15 கோடி செலவில் வடக்கு சரக்குத் தளம்-3-ஐ 14.20 மீட்டராக ஆழப்படுத்தும் பணி தொடங்கப்படும் நிலையில் உள்ளது. மேலும் 49 மீட்டர் அகலமும் மற்றும் 366 மீட்டர் நீளமும் கொண்ட பெரிய வகை கப்பல்கள் வருவதற்கு வசதியாக துறைமுக நுழைவுவாயிலை 152.40 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி ரூ.15.24 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. எளிமையான வர்த்தகம் நடைபெறுவதற்கு வசதியாக ஒரு மணி நேரத்தில் 100 சரக்கு பெட்டக வாகனங்களை ஸ்கேன் செய்யும் வசதி ரூ.47 கோடி செலவில் நிறுவும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.

5 மெகாவாட் தரை சார்ந்த சூரியமின் சக்தி ஆலை ரூ.19.81 கோடி செலவில் நிறுவப்பட உள்ளது. துறைமுகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்களில் 500 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூறை சூரியமின்சக்தி ஆலைகள் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மற்றொரு 140 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூறை எரிசக்தி திட்டமானது விரைவில் நிறுவப்பட உள்ளது. மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடல் மற்றும் நிலம் சார்ந்த பகுதிகளில் காற்றாலைகளை நிறுவுவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

துறைமுக பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க 2000 ஏக்கர் நிலப்பகுதியை துறைமுககம் ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக 334.30 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்குவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டதில் பல்வேறு நிறுவனங்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளன.

கரோனாவால் பாதிக்கப்பட்டு இலங்கை, மாலத்தீவு, ஈரான் ஆகிய நாடுகளில் சிக்கித் தவித்த 2,271 இந்தியர்கள் இந்திய கடற்படை கப்பல்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வழியாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். கரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பினால் துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் துறைமுக ஊழியர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கரோனா அறிகுறியுடன் காணப்படுவோரை தனிமைப்படுத்த துறைமுக கட்டிடங்களில் ரூ.20 லட்சம் செலவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கூடுதலாக 54 படுக்கை வசதிகளுடன் கூடிய 19 வார்டுகள் ரூ.25 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ளது.

கரோனா தொற்று உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இத்தருணத்தில் அதனை எதிர்கொள்ளும் வகையில் அயராது சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கும் துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளார் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x