Published : 14 May 2021 04:29 PM
Last Updated : 14 May 2021 04:29 PM

நீலகிரி, பெரம்பலூர், விருதுநகரில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்: வனத்துறை அமைச்சர் தகவல்

டிவிஎஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அரசு மருத்துவக் கல்லூரி டீன் மனோகரிடம் வழங்கினார்.

உதகை

நீலகிரி, பெரம்பலூர், விருதுநகர் மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதால், விரைவில் உற்பத்தி தொடங்கப்படும் என, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக விருந்தினர் மாளிகையில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 14) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா கட்டுப்பாட்டுப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார்.

அப்போது, டிவிஎஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர், நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறைக்கு வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆக்சிஜன் இருப்பு அதிகமாக உள்ளதுடன் சிகிச்சை மையங்களில் கூடுதலாகப் படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சம் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இறப்பு விகிதமும் குறைவாக உள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க நீலகிரி, பெரம்பலூர், விருதுநகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி இந்த 3 மாவட்டங்களிலும் தொடங்கப்படும்" என்றார்.

யானைகளைக் கண்காணித்து அடர்ந்த வனத்துக்குள் விரட்டத் தனிப் பிரிவு

தமிழகத்தில் யானை தாக்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்துக் கேட்டபோது, "மனித - வனவிலங்கு மோதலை உடனடியாகத் தடுக்க முடியாது. யானைகள் வழித்தடம் மற்றும் வனபகுதி ஆக்கிரமித்துள்ளதாலும், தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டு இருப்பதாலும் மனித - வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.

அதைத் தடுக்கவும், காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து ஊருக்குள் வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையில் புதியதாக ஒரு பிரிவு உருவாக்கப்படும். அந்தக் குழுவினர், குடியிருப்புப் பகுதிக்கு யானைகள் வருவதைத் தடுத்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x