Published : 13 May 2021 08:13 PM
Last Updated : 13 May 2021 08:13 PM

சென்னையில் மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழு இரண்டு மடங்காக அதிகரிப்பு

இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு அறிவித்துள்ள வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (மே 13) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு அத்திவாசிய சேவைகளை தவிர்த்து கட்டுப்பாடுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நடைமுறைப்படுத்த மண்டலத்திற்கு ஒரு குழு என, மொத்தம் 15 மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழுக்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இக்குழுவில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் உதவி வருவாய் அலுவலர் மற்றும் உரிமம் ஆய்வாளர் என, இரண்டு நபர்கள், காவல்துறையின் சார்பில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் என இரண்டு நபர்கள் மற்றும் சென்னை மாவட்ட வருவாய் துறையின் சார்பில் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் நிலையில் ஒருவர் என மொத்தம் 5 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டங்களில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய் துறையினருடன் இணைந்து அமைக்கப்பட்ட மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழுவினருக்கு (Zonal Enforcement Team) முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் இன்று அம்மா மாளிகை கூட்டரங்கில் ஆலோசனைகளை வழங்கினர்.

இக்கூட்டத்தில், ஊரடங்கு அமலாக்கக் குழுவினர் தங்கள் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு அரசின் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தொடர்ந்து அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாத கடைகளை மூடி சீல் வைக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாமல் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றாத நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, 09.04.2021 முதல் இதுநாள்வரை அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாத நபர்களிடமிருந்து ரூ.1,34,46,390 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவின் மூலம் மட்டும் 06.05.2021 முதல் இதுநாள் வரை ரூ.21,21,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அபராதம் விதிப்பது அரசின் நோக்கமல்ல. அதிகரித்து வரும் கரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்த மக்கள் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எனவே, மண்டலத்திற்கு ஒரு ஊரடங்கு அமலாக்க குழு என 15 மண்டலங்களுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கட்டுப்பாடுகளை மீறும் நபர்களை மேலும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க கூடுதலாக மண்டலத்திற்கு ஒரு குழு என, மேலும் 15 ஊரடங்கு அமலாக்கக் குழுக்கள் நாளை முதல் செயல்படுத்தப்படவுள்ளன".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x