Published : 13 May 2021 07:02 PM
Last Updated : 13 May 2021 07:02 PM

மதுரை தத்தனேரி மயானத்தில் கூடுதலாக 3 மின் எரியூட்டும் தகன மேடைகள்: கரோனாவால் இறந்தோர் உடல்களை எரிக்க உறவினர்கள் காத்திருக்கும் அவலம் தீரும்

மதுரை

மதுரையில் கரோனாவில் இறப்போர் உடல்களை உடனுக்குடன் எரிக்க முடியாமல் மயானங்களில் உடல்கள் குவிந்த நிலையில் உறவினர்கள் உடல்களை எரிக்க வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.

அதனால், தற்போது மாநகராட்சி நிர்வாகம், தத்தனேரி மயானத்தில் ஏற்கெனவே இருக்கும் 2 மின் எரியூட்டும் மேடைகளுடன் கூடுதலாக 3 எரியூட்டும் தகன மேடைகள் ஒரு வாரத்தில் அமைக்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு அடுத்து தென் மாவட்டங்களில் மதுரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே மதுரையில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 15 முதல் 17 பேர் இறப்பதாக கூறினாலும் 80க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் சிகிச்சையில் பலனளிக்காமல் இறப்பதாக கூறப்படுகிறது.

அதனாலேயே, மதுரையில் உள்ள மாநகராட்சி மின் மயானங்களில் கரோனாவால் இறப்போர் உடல்களை உடனுக்குடன் எரிக்க முடியாமல் குவிந்துள்ளன. உறவினர்கள் இறந்தவர்கள் உடல்களை மின் மயானங்களில் எரிக்க வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல்களை பெறுவத்கு 5 மணி நேரம் முதல் ஒரு நாள் ஆகிறது. அதுபோல் உடல்களை எரிக்கவும் ஒரு நாள் ஆகிவிடுவதால் கரோனாவில் இறந்தவர்களின் உறவினர்கள் ஏற்கெனவே பெரும் சோகத்தில் இருக்கும் நிலையில் இறந்தவர்களுக்கு இறுதி மரியாதையை கூட முறைப்படி செய்ய முடியாமல் மயானங்களில் காத்துக்கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் தத்னேரி, மூலக்கரை (கீரைத்துரை) ஆகிய இரண்டு இடங்களில் மின்மயானங்கள் உள்ளன. இவற்றில் தலா 2 மின் தகன மேடைகள் உள்ளன.

இந்த மயானங்கள், கரோனாவால் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய 24 மணி நேரமும் செயல்படுகின்றன. ஒரு உடலை எரிப்பதற்கு 40 நிமிடங்கள் ஆகும். ஒரு மின் தகன மேடையில் 25 உடல்களை எரிக்கலாம்.

அந்த வகையில் இரு மயானங்களிலும் 100 உடல்களை எரிக்கலாம்.

ஆனால், கரோனாவில் இறப்போரே 80க்கும் மேற்பட்டோர் என்பதோடு வீடுகளில் இறப்போர், தனியார் மருத்துவமனைகளில் இறப்போர், மற்ற காரணங்களில் இறப்போர் உடல்களை மயானங்களில் எரிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால், தற்போது எதிர்காலத் தேவையையும் தற்போது கரோனாவில் இறப்போர் உடல்களை எரிக்கவும் கவனத்தில் கொண்டு தத்தனேரி மயானத்தில் மேலும் 3 எரியூட்டும் மின் தகன மேடைகள் அமைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த மூன்று தகன மேடைகளும் ஒரு வாரத்தில் செயல்பாட்டிற்கு வந்துவிடும். அவை அமைந்தபிறகு தத்தனேரி மயானத்தில் மட்டுமே 125 உடல்களை எரிக்கலாம். இறப்போர் உறவினர்கள் உடல்களை எரிக்க மயானஙகளில் காத்திருக்கும் நேரமும் குறையும். மேலும், கரோனாவில் இறப்போரை மட்டும் தத்தனேரில் எரிக்கவும் முடிவு செய்யப்படும். மற்ற காரணங்களால் இறப்போர் உடல்கள் மூலக்கரை மயானத்திற்கு அனுப்பி வைக்கப்படும், ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x