Published : 13 May 2021 05:51 PM
Last Updated : 13 May 2021 05:51 PM

மாநகரம் முதல் கிராமம் வரை கிருமி நாசினி தெளிக்கக்கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் கிருமி நாசினித் தெளிப்பது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த பொம்மி ராஜு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், “கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் கரோனா பரவல் தொடங்கிய நிலையிலிருந்து, கிருமி நாசினி தெளித்து தொற்று பரவாமல் தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது.

சிறிய அளவிலான தெளிப்பான், தீயணைப்பு வாகனம், ராட்சத கிரேன், ட்ரோன் கேமிரா ஆகியவற்றின் மூலம் மருத்துவமனை வளாகங்கள், சாலை சந்திப்புகள், கோயம்பேடு வணிக வளாகம், நடைபாதை உள்ளிட்ட மக்கள் நடமாடும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்தது.

கரோனா பரவல் சற்றே குறைந்து தற்போது இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகளை கடந்த மார்ச் மாதம் முதல் அரசு தொடங்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, சோடியம் ஹைட்ரோ குளோரைடு கரைசலை கிருமி நாசினியாக பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளதால், அதை பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என வாதிட்டார்.

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கரோனா நுண்கிருமிகள் காற்றில் கலந்து மனித உடலுக்குள் செல்லும் என்பதால், தடுப்பதற்கு முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

மாநகரப் பகுதி தொடங்கி கிராமங்கள் வரை கிருமிநாசினி தெளிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும், தேவையான பொருட்களை வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் பொம்மிராஜின் வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x