Last Updated : 13 May, 2021 05:30 PM

 

Published : 13 May 2021 05:30 PM
Last Updated : 13 May 2021 05:30 PM

இஎஸ்ஐ மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தியா முழுவதும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாமா? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிகத்தில் கரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நடுத்தர மக்கள், ஏழைகள் கரோனா மருந்துகள், ஆக்சிஜன் தேவைக்கு பணம் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

தமிழகத்தில் இஎஸ்ஐ மருத்துவமனைகள், ரயில்வே மருத்துவமனைகள், ராணுவ மருத்துவமனைகள், மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான மருத்துவமனைகள் உள்ளன.

இந்த மருத்துவமனைகளை கரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு ஒதுக்கினால் பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் பணத்திலிருந்து தான் இஎஸ்ஐ மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

எனவே, இஎஸ்ஐ மருத்துவமனைகள், ரயில்வே மற்றும் ராணுவ மருத்துவமனைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்கவும், அந்த மருத்துவமனைகளில் முறையான படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, ஆம்புலன்ஸ், வெண்டிலேட்டர் வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி, இஎஸ்ஐ மருத்துவமனைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் இந்தியா முழுவதும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை அனுமதிக்கலாமே? என கேள்வி எழுப்பினார்.

பின்னர், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மே 17-க்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x