Published : 13 May 2021 05:12 PM
Last Updated : 13 May 2021 05:12 PM

ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் கரோனா பரவல்; செயல்பட அனுமதித்ததை எதிர்த்து வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

ஊரடங்கின் போது, ஆட்டோமொபைல் தொழிற்சாலையை செயல்பட அனுமதித்ததால் கரோனா தொற்று பரவுகிறது. அதனால், ஆலைகள் இயங்க அனுமதித்த உத்தரவை எதிர்த்து ரெனால்ட் நிசான் கார் நிறுவன பணியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் கார் உற்பத்தி நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், டயர் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதியளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதை ரத்து செய்யக் கோரி ரெனால்ட் நிசான் கார் நிறுவனப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாலாஜி கிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், “3,500 தொழிலாளர்கள் பணியாற்றும் இந்தத் தொழிற்சாலையில் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 185 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.

நிறுவன போக்குவரத்து மற்றும் உணவகத்தில் தனிமனித இடைவெளி மற்றும் கட்டுப்பாட்டு விதிகள் முறையாக அமல்படுத்தப்படாமல் செயல்பட்டு வருகிறது”. என அச்சம் தெரிவித்துள்ளார்.

இதேபோல விப்ரோ ஹைட்ராலிக் சிலிண்டர் உற்பத்தி தொழிற்சாலை ஊழியர் சங்கமும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, குறிப்பிட்ட நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதித்திருந்தாலும், ஊழியர்களின் நலன் கருதி நிறுவனம் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும், தொழிற்சாலையைத் திறக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும் தெரிவித்தது.

பின்னர் மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், ரெனால்ட் நிசான் நிறுவனம், விப்ரோ ஹைட்ராலிக் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மே 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x