ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆட்சிப்பணிக்கான முதல் நிலைத்தேர்வு ஒத்திவைப்பு: யூபிஎஸ்சி அறிவிப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆட்சிப்பணிக்கான முதல் நிலைத்தேர்வு ஒத்திவைப்பு: யூபிஎஸ்சி அறிவிப்பு
Updated on
1 min read

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் (prelims) தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.

மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு ஜூன் மாதம் 27 ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதும் தேர்வில் தேர்வாகும் தேர்வர்கள் பின்னர் முதன்மைத் தேர்வு (mains) எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி அடைபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஆனால், கரோனா இரண்டாவது அலை பரவல் பாதிப்பால் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் முதல் நிலைத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரோனோ தொற்று பரவலால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்த மத்திய பணியாளர் தேர்வாணையம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் தேர்வர்கள் மற்றும் ஆலோசகர்கள் வரவேண்டியதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2020 சிவில் சர்வீஸ் தேர்வு (முதல்கட்டம் -prelims) ,பொறியியல் சேவைகள் (prelims-முதன்மை), புவியியலாளர் சேவைகள் ( prelims-முதன்மை) தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

''நாடெங்கும் கோவிட்-19 இரண்டாம் அலை பரவல் நிலையைக் கருத்தில் கொண்டு யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வை நடத்துவது சாத்தியமில்லை.

சிவில் தேர்வின் முதல்நிலைத் தேர்வு (prelims) ஜூன் 27 ஆம் தேதி அன்று நடப்பதாக இருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் நிலைத்தேர்வு அக்டோபர் 10 ஆம் தேதி நடக்கும்”. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தேர்வானவர்களுக்கான நேர்முகத்தேர்வும் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் முதல் நிலைத்தேர்வும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வர்கள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in