Published : 13 May 2021 12:22 PM
Last Updated : 13 May 2021 12:22 PM

கோவிட் நோயாளிகளுக்கு ஆக்சிஜன், படுக்கை வசதியுடன் பேருந்து: அமைச்சர் கண்ணப்பன் தகவல்

கோவிட் நோயாளிகள் ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் இல்லாமல் தவிக்கும் நிலையில் பேருந்துகளில் படுக்கை, ஆக்சிஜன் வசதியுடன் கோவிட் நோயாளிகளுக்காக பேருந்துகளை பயன்படுத்தும் திட்டம் உள்ளதாக அமைச்சர் கண்ணப்பன் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தபின்னர் போக்குவரத்து அமைச்சர் கண்ணப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“கோயம்பேட்டில் பேருந்தில் பயணித்த பெண்களிடம் கேட்டேன், ஒரு நாளைக்கு ரூ.70 மிச்சம், மாதம் ரூ.2000 மிச்சமாகிறது என்று தெரிவித்தார்கள். மிக அருமையான திட்டம். அதை முதல்வர் அமல்படுத்தியுள்ளது பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

போக்குவரத்துத் துறையை சீரமைக்கவேண்டியது நிறைய உள்ளது. போக்குவரத்து துறையில் நிறைய கஷ்டங்கள் உள்ளது. என்னென்ன பிரச்சினைகள் உள்ளது, பேருந்து வசதிகள், எங்கெல்லாம் உணவுக்காக பேருந்துகளை நிறுத்துகிறார்கள் என்பது குறித்து ஆய்வுக்கூட்டம் காலையில் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் நடக்க உள்ளது.

மதியத்துக்குமேல் போக்குவரத்து ஆணையர், இணை ஆணையர்களை, ஆர்டிஓக்களை அழைத்து அவர்கள் கீழுள்ள துறைகளில் உள்ள பிரச்சினை, எத்தனை பஸ்கள் வருகிறது, எத்தனை ஆட்டோக்கள் வருகிறது, என்ன பிரச்சினை உள்ளது, எவ்வளவுபேர் வேலை செய்கிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச உள்ளோம்.

பேருந்து வசதி சுத்தமாக பொதுமக்களுக்கு நிறைவான சேவை அளிக்கவேண்டும் என்பதுதான் முதல்வரின் வேண்டுகோள். நல்ல நிர்வாகம் மக்களுக்கு உபயோகமாக இருக்கவேண்டும் என்பது முதல் நோக்கம். இந்த நஷ்டங்களை எப்படி ஈடுபட்ட வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. முதலில் 1.6 கோடி பேர் பிரயாணம் செய்தார்கள். கோவிட் வந்தப்பின் அது 90 லட்சமாக குறைந்தது.

தற்போது சுத்தமாக நிறுத்தியுள்ளோம். இதைத்தவிர சுங்கக்கட்டணம் பாக்கி வேறு உள்ளது. பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிர்பயா திட்டத்தின் கீழ் அமைக்கும் திட்டம் ஏற்கெனவே உள்ளது அதை விரைவுப்படுத்தவேண்டும் என்பதே நோக்கம். முன்களப்பணியாளர்களை கொண்டு கோவிட் நேரத்தில் மக்களுக்கு சேவை ஆற்றுகிறோம். கூடுதலாக பேருந்து தேவைப்பட்டால் கொண்டுவருவோம்.

ஆக்சிஜன் பிரச்சினையுடன் நோயாளிகள் ஆம்புலன்ஸ் இல்லாமல் தவிக்கும் நிலையில் பேருந்துகளில் ஆக்சிஜன் செட்டப்புடன், படுக்கை வசதியுடன் பயன்படுத்த சாத்தியக்கூறு உள்ளதா? என சுகாதாரத்துறையுடன் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளோம். அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சாதாரண பேருந்துகள் தற்போது கோவிட் காரணமாக குறைவாக இயக்கப்படுகிறது. எல்லாம் சரியானவுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்”.

இவ்வாறு அமைச்சர் கண்ணப்பன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x