Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM
சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரங்களில், அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்கிறது என்று அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பூங்கா வளாகத்தில் மகாகனி மரக்கன்று நடவு செய்தஅமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2010-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் நினைவாக, சென்னையில் ரூ.8 கோடியில் 7.92 ஏக்கரில் செம்மொழிப் பூங்காவை உருவாக்கினார்.
மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள சென்னையில் இதுபோன்ற பூங்காக்கள் தேவை. தோட்டக்கலைத் துறை மூலம் 24 பூங்காக்கள் தமிழகம் முழுவதும் பராமரிக்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 78விதை நாற்றுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக விதைகள் வழங்கப்படுகின்றன.
திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் சரியாக பாராமரிக்கப்படாத நிலையில், அவற்றை சரியாகப் பராமரிப்பதுடன், தமிழகத்தில் மேலும் 120-க்கும் மேற்பட்ட புதிய உழவர் சந்தைகள் திறக்கப்படும்.
புதிய வேளாண் சட்டங்களை தடை செய்வது தொடர்பாக, ஆராய்ந்து உரிய முடிவு மேற்கொள்ளப்படும். பலாப் பழங்களை சந்தைப்படுத்துவது, பண்ருட்டி பலாப் பழங்களை விவசாயிகள் தடையின்றி சென்னைக்கு கொண்டுவருவது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மும்முனை மின்சாரத்துக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு, விரைவில் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரங்களில், அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT