Published : 12 May 2021 09:27 PM
Last Updated : 12 May 2021 09:27 PM

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் இஎம்ஐ-க்கு 6 மாதங்கள் சலுகை தருக: பிரதமர், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் இஎம்ஐ-க்கு 6 மாதங்கள் சலுகை தர வேண்டி பிரதமர், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, கடந்த மே 9ம் தேதி முழு ஊரடங்கைச் செயல்படுத்துவது குறித்து, தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதனடிப்படையில் நேற்று ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்து பழக்கடைகள், நாட்டு மருந்துக் கடைகள் இயங்க அனுமதி அளித்திருந்தார். இன்று அதே கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இஎம்ஐ சலுகை கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி, ரிசர்வ் வங்கி ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கைச் செயல்படுத்துவது குறித்து, தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-5-2021 அன்று முதல்வர் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், ‘சிறு குறு தொழில்நிறுவனங்கள், ஆட்டோரிக்ஷா, கால்டாக்சி, வாகனம் வைத்திருப்போர் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை (EMI) கட்டுவதற்கும் காலநீட்டிப்பு வழங்குவது குறித்து ஒன்றிய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தப்படும்’ என்று முதல்வர் அறிவித்தார்.

அதனடிப்படையில், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, அவர்களுடைய கடன் சுமையைக் குறைக்கும் வகையில், 6 மாத காலத்திற்கு அவகாசம் வழங்கிட வேண்டும் என்றும், இந்தக் காலத்திற்கு வட்டி ஏதும் வசூலிக்கப்பட கூடாது என்றும், தொழிலாளர்களிடமிருந்து மாதந்தோறும் வசூலிக்கப்படும் வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதித் தொகையை, ஆறு மாதங்களுக்கு பிடித்தம் செய்திடக் கூடாது என்றும் வலியுறுத்தி, பிரதமருக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x