

தமிழக அரசும், மருத்துவர்களும் கூறுவதுபோல் அடிக்கடி கை கழுவவதற்கும், துணிகளை துவைக்கவும் பயன்படும் சோப் மற்றும் டிடெர்ஜென்ட் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கவும், அத்தொழிற்சாலை இயக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு 14 வகையான சலுகைகளை வழங்கியிருக்கிறது. இதற்கு அந்த நிறுவனங்கள் தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பும், நன்றியும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், கரோனா தொற்று பரவும் இந்த காலத்தில் கைகளை கழுவவும், துணிகளை துவைக்கவும் அதிகம் பயன்படும் சோப் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்காததால் தமிழ்நாடு சிறுதொழில் சோப் மற்றும் டிடெர்ஜென்ட் நிறுவன சங்கத்தினர் கவலையடைந்துள்ளனர்.
அவர்கள், சோப்பை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்த்து அதன் உற்பத்தியை தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி ழவங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அனுமதியும் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு தொழில் சோப் மற்றும் டிடெர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மாணிக்க வேல் கூறியாதாவது:
தற்போது கரோனா காலத்தில் வெளியே சென்று வந்தாலும், வீட்டில் இருந்தாலும் அடிக்கடி சோப்பை கொண்ட கைகளை கழுவதற்கு தமிழக அரசு விழிப்புணர்வு செய்து கொண்டிருக்கிறது.
மருத்துவர்களும் பொதும்களை அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றனர். மேலும், மக்கள் தாங்கள் அணியும் ஆடைகளை தினசரி சோப்பை கொண்டு துவைத்தால் மட்டுமே அதில் உள்ள கிருமிகளை அகற்ற முடியும்.
ஆனால், தற்போது தமிழக அரசின் கரோனா ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள அனைத்து சோப் மற்றும் டிடெர்ஜென்ட் தொழிற்சாலைகளும் இயங்காமல் மூடிக்கிடக்கின்றன.
சோப் தேவை இக்காலத்தில் அதிகமாக தேவையிருந்தும் நிறுவனம் மூடிக்கிடப்பதால் அதில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சோப் இடம்பெறாததே காரணமாகும். அதனால், சோப்பை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்குமாறும், இந்த நிறுவனங்களை இயக்குவதற்கும் அனுமதிக்கவும் வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்தார்.