Last Updated : 12 May, 2021 03:27 PM

 

Published : 12 May 2021 03:27 PM
Last Updated : 12 May 2021 03:27 PM

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை

மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் பா.ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு போன்றவற்றால் வாழ்வாதார பாதிப்பை சந்திந்தவர்களுக்கு பொருளாதார உதவி செய்யும் வகையில் 2,07,87,950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் அரிசி குடும்ப அட்டைகள் வைத்துள்ளனர். இவர்களுக்கு ஊரடங்கு காலத்திலும் முழு சம்பளம் வழங்கப்படுகிறது. ஊரடங்கால் அரசு ஊழியர்களுக்கு வருமான இழப்பு ஏற்படவில்லை.

அரசு ஊழியர்களின் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணத்தை ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்கவும், புதிய ஆக்சிஜன் உற்பத்தியை ஆலை அமைக்கவும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் பயன்படுத்தலாம்.

தனியார் வாகன ஓட்டுனர்கள், நடத்துனர்கள், நடைபாதை வியாபாரிகள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், சிறு தொழிலக உரிமையாளர்கள், தொழிலாளிகள், கூலித் தொழிலாளிகள், தள்ளுவண்டி வியாரிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தான் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தான் உண்மையிலேயே பொருளாதார உதவி தேவைப்படுகிறது.

எனவே, மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்கள், அரசு சார்பு நிறுவனங்களின் பணிபுரிபவர்கள், ஓய்வூதியர்களின் அரிசு குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க தடை விதித்தும், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், கரோனா ஊரடங்கால் உண்மையில் வருவாய் இழப்பு ஏற்பட்டவர்களின் குடும்ப அட்டைகளுக்கும் ரூ.2 ஆயிரம், அதற்கு மேல் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x