இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை: மனுவை முடித்து வைத்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை: மனுவை முடித்து வைத்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

Published on

இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய அதிகாரம் இல்லை என்று கூறி அது தொடர்பான மனுவை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்தியாவில் கரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதால் மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாடு காரணமாக கரோனா தொற்றாளர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

ஆக்சிஜன் கம்பெனிகள் பல தனியார் வசம் இருப்பதால் அவர்கள் விலை அதிகமாக விற்கின்றனர். இதனால் ஏழை எளிய மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்து இந்தியாவிலுள்ள தனியார் மற்றும் அரசு சார்ந்த அனைத்து ஆக்ஸிஜன் கம்பெனிகள் மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் மருத்துவமனைகள் ஆகிய அனைத்தையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்களை கரோனா பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும். எனவே இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி, இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. கரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன என்று கூறி மனுவை முடித்து உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in