Published : 12 May 2021 02:13 PM
Last Updated : 12 May 2021 02:13 PM

ஆக்கிரமிப்பு கோயில் நிலத்தை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ''சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவங்கரை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன.

1962 முதல் 1982ஆம் ஆண்டு வரை கோயில் அறங்காவலர்களாக இருந்த பொன்னுசாமி, ரத்தினவேல், பாலசுந்தரம் ஆகியோர் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, கோயில் நிலங்களில் அறநிலையத்துறை அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது.

ஆனால், காரணீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதுடன், அந்த நிலங்களில் சட்டவிரோதமான கட்டுமானங்கள் எழுப்பவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்களில் வாடகைதாரர்கள் பலர் இருந்தபோதும், 79 பேர் செலுத்தும் வாடகை விவரங்களை மட்டுமே அறநிலையத்துறை வழங்கியுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்காத அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளையபெருமாள், அறநிலையத் துறை தரப்பில் ஸ்ரீஜெயந்தி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 2-வது வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x