Published : 12 May 2021 01:20 PM
Last Updated : 12 May 2021 01:20 PM

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் வீதம் குறைந்துள்ளது ஏன்?- ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் குறைந்துள்ளதற்கு என்ன காரணம் என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கரோனா நோயில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் சற்று குறைந்துள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம், மருத்துவ வல்லுநர்களுடன் இணைந்து சிகிச்சை வழிமுறைகளை மாற்றி நிர்ணயித்ததுதான். முன்பெல்லாம் பத்து நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மூன்று நாட்கள் தொடர் காய்ச்சல் இல்லை என்றால் கரோனா தொற்றாளர்களை டிஸ்சார்ஜ் செய்து கொண்டிருந்தோம்.

தற்போது டிஸ்சார்ஜ் செய்த பிறகும் கூட, சில தொற்றாளர்களுக்குச் சிரமங்கள் இருந்தால், ஓரிரு நாட்கள் தேவைப்பட்டால் கோவிட் கவனிப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கிறோம். இதை குணமடைந்து வீடு திரும்புவதாகக் காட்டாமல், சிகிச்சையில் இருப்பதாகக் காட்டுவதால்தான் குணம் அடைந்தோர் விகிதம் சற்று குறைந்துள்ளதாகத் தோன்றுகிறது. கரோனா தொற்றாளர்களின் திடீர் இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கோவிட் தொற்றுப் பரிசோதனைகளின் எண்ணிக்கை எவ்விதத்திலும் குறைக்கப்படவில்லை. எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அப்போது கரோனா தொற்றுப் பரவல் விகிதம் சற்று அதிகரித்து, அதிலேயே நின்ற பிறகு மெதுவாகக் குறையும் என்பதுதான் தொற்று நோய் நிபுணர்களின் கணிப்பாக உள்ளது'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x