Published : 12 May 2021 11:48 AM
Last Updated : 12 May 2021 11:48 AM

சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்பு

சபாநாயகர் மு.அப்பாவு - துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி: கோப்புப்படம்

சென்னை

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக மு.அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் இன்று பதவியேற்றனர்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, 16-வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கீழ்பென்னாத்தூர் திமுக எம்எல்ஏ கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டார்.

சட்டப்பேரவையின் சபாநாயகராக யார் இருப்பார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. சபாநாயகர், துணை சபாநாயகருக்கான தேர்தல் இன்று (மே 12) நடைபெறவிருந்தநிலையில், சபாநாயகருக்கான தேர்தலில் ராதாபுரம் எம்எல்ஏ மு.அப்பாவு, துணை சபாநாயகருக்கான தேர்தலில் எம்எல்ஏ கு.பிச்சாண்டி ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவர் என, திமுக தலைமை அறிவித்தது.

இந்நிலையில், நேற்று (மே 11) சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், பகல் 12 மணிக்குள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 12 மணி வரை சபாநாயகர் பதவிக்கு அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். எனவே, போட்டியின்றித் தேர்வாகியுள்ள இருவரும், இன்று (மே 12) பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வானதை தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி அறிவித்தார். இதையடுத்து, பதவியேற்றுக்கொண்ட சபாநாயகரை முதல்வர் ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். பின்னர், முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x